இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

வருக ! வருக !! مرحبًا بكم أهلاً وّسهلاً


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

செவ்வாய், டிசம்பர் 30, 2008

பொய்யன் சொன்ன உண்மை

சூரத்துல் பகராவின் 255 வது வசனம் ஆயத்துல் குர்சி (அரசாட்சி வசனம்) எனப்படும் இதன் மகத்துவம் பெரியது. 'இறை வேதத்திலேயே இது ஒரு சிறப்பான வசனம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளும் வந்துள்ளது. இத்தகைய ஆயத்துல் குர்சியின் சிறப்பு குறித்து இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பின்வரும் ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.

அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவர், நான் ஓர் ஏழை!. எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன்.

விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் என்று கேட்டார்கள் நான், இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப்பிடிப்பதற்காக) காத்திருந்தேன்.

அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனி நான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன்.

விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான் எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன்.

நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.

அதற்கவன் என்னைவிட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்! என்றான்.

அதற்கு நான் அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்றான்.

விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான் அதனால் அவனைவிட்டு விட்டேன்! என்றேன்.

அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன்.

- நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் -

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். தெரியாது? என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 2311, 3275, 5010)
Download As PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக